தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம்(கோலாலம்பூர்) நூலுக்குப் புலிகரம்பலூர் புலவர் அ. பொன்னையனார் வாழ்த்து!
புலிகரம்பலூர் புலவர் பொன்னையன்
21----01-----2026--அறிவன்
வைகறை. ---4. மணி
-----------------------------------------
இடைக்கட்டு முனைவர்
இளங்கோ ஐயனே!
தடைக்கட் டில்லாநின்
தமிழ்ச்சுவை மாந்தி
உடைபட் டுள்ளதென்
உள்ளம்! சண்முகர்
நடைபெற் றுள்ள
நல்வர லாற்றை
நள்ளிர விரண்டில்
நறுமலர்த் தேனைக்
கள்ளினை அருந்திக்
களிப்பவன் போலக்
கண்டுளங் கொண்டு
கலந்தனன் காண்க!
விண்டிட வொண்ணா
வியப்பினன் ஆனேன்
நல்லதோர் படைப்பு;
நாட்டங் கொண்டு
செல்லரிக் காத
சிந்தனைத் தேடல்!
வாழ்த்தினை வழங்கி
மகிழ்ந்திடு கின்றேன்
தோய்ந்தினும் பற்பல
தூயநல் நூல்கள்
ஆய்ந்துளங் கண்டே
அளித்தே வாழ்க
பாய்ந்துளங் கவ்வும்
பாங்கினில் உலகே!
உள்ளொளி இறைவன்
உணர்வினில்
கொள்ளிடங் கொடுத்து
குழைந்து வாழ்கவே!
---அகங்கனிந்த அன்பு

Comments
Post a Comment